கம்பரா? வம்பரா?
தான் ஐநூறு பொன் பெற்று ஏழையாக்கிய தாசியை ஔவையார் கூழுக்குப் பாடி செல்வச் சீமாட்டியாக ஆக்கியதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மேல் அசூயை கொண்டாராம்.
ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்தபொழுது கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும் ஆரைக்கீரைக்கும் சிலேடையாக
ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ
என்று கூற ஔவையார் கோபங்கொண்டு
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா விடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது
என்று பதிலிறுத்தாராம்.
எட்டு (8) என்ற எண்ணுக்குத் தமிழில் "அ", கால் (1/4) என்ற எண்ணுக்கு "வ", அதனால் எட்டேகால் லட்சணமே என்றால் "அவலட்சணமே" என்றாகிறது. பெரியம்மை என்றால் மஹாலக்ஷ்மியின் அக்காளான மூதேவி. கூரையில்லா வீடென்றால் குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் அனுமன் ஒரு குரங்கு. கம்பர் ராமாயணத்தை எழுதியதால் அவர் ஒரு வகையில் ரராமனின் தூதுவனாகிறார். நீ சொன்னது ஆரைக்கீரை எனும் பொருள்பட அடீ என்று சொன்னதற்கு பதிலுரையாக "அடா"வைச் சேர்த்து ஆரையடா என்றார்.